வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பிஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (44), தற்காலிக பட்டியல் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இங்கு சிதம்பரம் வட்டம் பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (45) சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். இங்கு விவசாயி அழகுவேல் நெல் கொள்முதல் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளார். அவருக்கு மார்ச் 12ம் தேதி நெல் கொள்முதல் செய்ய டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், நெல்லை கொள்முதல் செய்யாததால் பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரனிடம் கேட்டுள்ளார். அவர் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் 200 நெல் மூட்டைகளுக்கு 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.