சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் திறப்பதற்காக வேதாந்தா நிறுவனம் பல்வேறு குறுக்கு வழிகளில் முயற்சித்து வருவதும், பணத்தை வாரியிறைத்து ஆலைக்கு ஆதரவாகக் கருத்துருவாக்கத்தையும், செயற்கையாக ஒரு அணிதிரட்டலையும் உருவாக்க முயற்சித்து வருவதுமான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. எனவே வேதாந்தா நிறுவனத்தின் சூழ்ச்சிக்கெதிராகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமெனும் கோரிக்கையை வலியுறுத்தியும் தூத்துக்குடி, பாத்திமா நகர் மக்கள் நடத்தியப் போராட்டம் குறித்தான செய்தி அறிந்தேன்.