தேனி: ஆண்டிபட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைதொடரான வண்டியூர் மலைப்பகுதியில் வேகமாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமடைந்து வருகின்றன. தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி மேற்குத்தொடர்ச்சி மலை, கேரளா மாநிலம் வரை பரந்து விரிந்திருக்கிறது. இந்த பகுதியில் உள்ள ஆண்டிபட்டி வண்டியூர் மலைப்பகுதியில் நேற்று இரவு திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி வருவதால் மலைப்பகுதியில் உள்ள சுமார் 5 ஏக்கருக்கும் மேலாக கொத்தகல்லி மரம், வேலமரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அடியோடு எரிந்து சேதமடைந்தன. மலையடிவார தோட்ட பகுதியில் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.