மதுரை: சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடந்த 2015ல் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள்,
‘‘சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக 39 உத்தரவுகள் கொடுக்கப் பட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.செல்வம், பாரதிதாசன் ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை 6 மாதத்துக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்களே பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மனுதாரர் கூறிய ஆலோசனைகளும் உத்தரவில் சேர்க்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம், வட மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் ஆகியோர் தலைமையிலும், கண்காணிப்பிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெறும்’’ என்றனர்.
அப்போது, தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக வைகோ கூறினார். அதற்கு நீதிபதிகள், ‘‘இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் தான் அதற்கான பலன் கிடைக்கும்’’ என்றனர்.
