திருப்போரூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற 11 திமுக கவுன்சிலர்கள் நன்றி அறிவிப்பு கூட்டம்: பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்போரூர் பேரூராட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 11 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இதற்கான, நன்றி அறிவிப்பு மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்போரூரில் நடந்தது. பேரூராட்சி தலைவரும், பேரூர் திமுக செயலாளருமான மு.தேவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி வீ.சந்திரன் வரவேற்றார். நகர நிர்வாகிகள் அஸ்கர்அலி, பலராமன், ரவி, மோகன், சேகர், நவநீதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன், தலைமை பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற 11 கவுன்சிலர்களையும் வாழ்த்தினர். பின்னர், பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், புடவை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில், திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர், மாவட்ட துணைச் செயலாளர் அன்புச்செழியன், மாவட்ட இளைஞர் அணித் துணை அமைப்பாளர் தையூர் விஜயகுமார், வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கௌரிசங்கர் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் திருப்போரூர் நகர இளைஞர் அணி அமைப்பாளர் பாலு நன்றி கூறினார்.

Related Stories: