நாகர்கோவில்: ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நாளை மறுதினம் (1ம்தேதி) மகா சிவராத்திரி ஆகும். இந்த நாளில் சிவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் மகா சிவராத்திரி அன்று, குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெறும். கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் 110 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள 12 சிவாலயங்களை ஓடி சென்று வழிபடுவார்கள். தற்போது வாகனங்களிலும் செல்வது வழக்கமாக உள்ளது. மாலை அணிந்து விரதம் இருந்து, காவி உடை அணிந்து, கையில் விசிறி, இடுப்பில் திருநீறு பையுடன் பக்தர்கள் ஓட்டமும் நடையுமாக செல்வர். திருமலையில் இருந்து ஓட்டத்தை நாளை (28ம்தேதி) மாலை தொடங்குவர்.