ஆழ்துளை கிணறுக்கு மின்மோட்டார் மானியத்தை உயர்த்த வேண்டும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி அல்லது சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளை நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்றவற்றிற்கு தேவையான மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

குறிப்பாக ஆழ்துளை கிணறு அமைக்க சுமார் ரூ. 9 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையும், மின்மோட்டார் அமைக்க ரூ. 75 ஆயிரம் வரையும் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் அமைக்க வேளாண்துறை மூலம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை வழங்கப்படும் மானியம் போதுமானதல்ல என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதாவது ஆண்டு முழுவதும் மழைக்காலம், வெயில்காலம் என எக்காலத்திலும் விவசாயம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இடத்திற்கு ஏற்ப புதிய கிணறு அல்லது புதிய ஆழ்துளை கிணற்றை அமைக்க விவசாயிகளுக்கு மானியத்தை உயர்த்தி கொடுத்தால் விவசாயிகள் பயன் பெறுவார்கள். விவசாயிகள் தங்கள் பாசனத்துக்கு தேவையான அனைத்துக் கருவிகளை வாங்கவும், டிராக்டரை விருப்பப்படும் நிறுனங்களில் இருந்து தருவிக்கவும், இவற்றிற்காக மானியத்தை உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post ஆழ்துளை கிணறுக்கு மின்மோட்டார் மானியத்தை உயர்த்த வேண்டும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: