சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு சுயேச்சை வேட்பாளர் தர்ணா போராட்டம்

சேலம்: சேலம் ஜாகீர்காமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல். பாரத மக்கள் கட்சி மாநில தலைவரான இவர், சேலம் மாநகராட்சி 1வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரத்தை முடித்தநிலையில், வார்டு பகுதியில் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை செல்போனில் படம் எடுத்துள்ளார். அப்போது அந்த நபர்கள், சுயேச்சை வேட்பாளர் கதிர்வேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி சூரமங்கலம் போலீசில் கதிர்வேல் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை, சுயேச்சை வேட்பாளர் கதிர்வேல், தனது மனைவி மற்றும் குடும்பத்தார் 8 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

நுழைவுவாயில் முன் திடீரென வேட்பாளர் கதிர்வேல் உள்ளிட்ட 8 பேரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் சிறப்பு எஸ்.ஐ., கண்ணன் தலைமையிலான போலீசார், கதிர்வேல் உள்ளிட்ட 8 பேரையும் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சேலம் அரசு மருத்துவமனையில் கதிர்வேல், சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தர்ணா போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: