ஒட்டன்சத்திரத்தில் அதிகாலை துணிகரம் டாக்டர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 150 பவுன் கொள்ளை: சொகுசு காரையும் எடுத்துச் சென்றதால் பரபரப்பு

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலையை சேர்ந்தவர் சக்திவேல் (52). பிரபல டாக்டர்.  தந்தை சென்னியப்பன், தாயார் வேதநாயகம், மனைவி ராணி. நாகணம்பட்டி புறவழிச்சாலையில் சக்திவேல் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 2 மகன்கள் வெளியூரில் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சக்திவேல், மனைவி ராணி ஆகியோர் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கினர். சென்னியப்பன், வேதநாயகம் வீட்டின் முன்புள்ள வராண்டாவில் படுத்திருந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டின் காம்பவுன்ட் சுவரை தாண்டி குதித்த மர்ம நபர்கள், வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த சென்னியப்பன், வேதநாயகம் ஆகியோரை கத்தியால் மிரட்டி அவர்களிடமிருந்த வீட்டுச்சாவியை பறித்தனர். பின்னர் வீட்டிற்குள் புகுந்து, அங்குள்ள அறையில் தூங்கி கொண்டிருந்த சக்திவேல், ராணியையும் எழுப்பினர். பின்னர் 4 பேரையும் கயிற்றால் கட்டி போட்டனர். தொடர்ந்து மர்ம நபர்கள், பீரோவிலிருந்த 150 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள காரையும் திருடி விட்டு தப்பினர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒரு வழியாக கை கயிற்றை அவிழ்த்த சக்திவேல், இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

* சிசிடிவி இல்லாததால் சிக்கல்

கொள்ளை நடந்த வீட்டில் சிசிடிவி கேமராக்கள் ஏதும் பொருத்தப்படவில்லை. இதனால்தான் கொள்ளையர்கள் துணிச்சலாக வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்ததுடன், காரையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் கொள்ளையர்களை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: