அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் இருந்து வங்கதேசத்துக்கு நீர்வழி போக்குவரத்து துவங்குவதற்கான பணியை ஒன்றிய அரசு விரைவுப்படுத்தி இருக்கிறது. சாகர்மாலா என்ற திட்டத்தின் கீழ், நீர்வழி போக்குவரத்துக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு நதிகளில் ஏற்கனவே படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரிபுராவில் உள்ள செபாஹிஜாலா மாவட்டம், சோனாமுரா என்ற இடத்தில் இருந்து வங்கதேசத்தின் தவுட் கண்டி வரை 93 கிமீ நீளமுள்ள கோமதி ஆற்றில் படகு போக்குவரத்து துவங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக ஆற்றை ஆழப்படுத்தவும், 10 இடங்களில் படகு தளங்கள் அமைக்கவும் ரூ.24.53 கோடியை ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை ஒதுக்கியுள்ளது.