ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தவறில்லை: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கையில் தவறில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், பெத்தேல் நகர்  குடியிருப்போர் பாதுக்காப்பு நலசங்கம் மற்றும் குடியிருப்புவாசிகள் தொடர்ந்த வழக்குகளும் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடியிருப்போரின் விவரங்களை அரசுக்கு வழங்க வேண்டும். பின்னர் அவற்றை தொகுத்து பட்டியலாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதற்கிடையில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்து நத்தம் புறம்போக்கு நிலமாக மாற்றி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால், அதன்படி பட்டா வழங்கக் கோரி பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாவட்ட கலெக்டர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். அந்த நிலத்தின் தன்மையை வகைமாற்றம் செய்ய நில நிர்வாக ஆணையருக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசின் நடவடிக்கையில் தவறில்லை என்று தெரிவித்து விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: