திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி நாளான இன்று காலை முதல் இரவு வரை 7 வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 9 நாட்கள் மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தாயார்களுடன் 16 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதேபோல் ஆண்டுதோறும் ரதசப்தமியன்று ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பசுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வருவார். இதனை ‘மினி பிரம்மோற்சவம்’ என அழைப்பார்கள்.
அதன்படி இந்த ஆண்டு ரதசப்தமி நாளான இன்று அதிகாலை 5.30 மணிக்கு தங்க சூரிய பிரபை வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோயிலில் உள்ள சம்பங்கி (கல்யாண உற்சவ) மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 9 மணிக்கு சின்ன சேஷ வாகனத்திலும், 11 மணிக்கு கருட வாகனத்திலும், 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.