போடி: போடி மெட்டு மலைச்சாலையில் 12வது கொண்டை ஊசி வளைவு முதல் 16வது கொண்டை ஊசி வளைவு வரை மழையால் ஏற்பட்டுள்ள மெகா பள்ளங்களால், இரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், போடியிலிருந்து கேரள மாநிலத்தை இணைக்கும் சாலையாக போடி மெட்டு மலைச்சாலை உள்ளது. இந்த சாலை முந்தல் மலை அடிவாரத்திலிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் 27 கி.மீ தூரச் சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையில் தினசரி ஏலத்தோட்ட விவசாயிகள், தொழிலாளர்களின் வாகனங்கள், இருமாநில அரசு போக்குவரத்து பஸ்கள், கனரக வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், டெம்போக்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.