குத்தாலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு-போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றினர்

குத்தாலம் : குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடத்தை போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் மீட்டெடுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் மன்மதீஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் பின்புறம் மணவெளி தெருவில் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 6 ஆயிரத்து 600 சதுர அடி பரப்பளவில் உள்ள இடம் சம்பந்தம் என்பவர் கட்டுப்பாட்டில் (பகுதி) உள்ளது. இந்த இடத்தை 10 ஆண்டுகளுக்கு முன் தியாகராஜன் என்பவர் வாங்கி உள்ளார். ஆனால் பகுதி மாற்றம் செய்யப்படவில்லை. கமர்ஷியல் கட்டணத்தில் உள்ள அந்த இடத்திற்கு ரூ.14 லட்சம் வாடகை செலுத்தாததால் கடந்த 2016ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற இணை ஆணையர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று (27ம்தேதி) இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், மற்றும் அறநிலையத் துறை தாசில்தார் விஜயராகவன், குத்தாலம் தாசில்தார் பிரான்சுவா முன்னிலையில் அதிகாரிகள் அந்த இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் செயல் அலுவலர் நிர்மலா தேவி, ஆய்வர் ஹரிசங்கர், குத்தாலம் விஏஓ மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் வள்ளி, செல்வம் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கம்பி வேலி அமைத்து, அந்த இடம் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மன்மதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் என்ற போர்டை அறநிலையத்துறை அதிகாரிகள் நட்டு வைத்தனர்.

Related Stories: