உடுமலை: குடியரசு தின விடுமுறையையொட்டி திருமூர்த்திமலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியவில்லை. நேற்று குடியரசு தின விடுமுறை என்பதால், சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர். உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தனர். திருமூர்த்தி அணையை பார்வையிட்டனர். பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர். நீச்சல் குளத்திலும் சிறுவர்கள் குளித்தனர். அணை கரையோர பகுதியில் பொழுதுபோக்கி சென்றனர்.