அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் நான் போட்டியிட்டால் கமலாவும் போட்டியிடுவார்: ஜோ பைடன் தகவல்

வாஷிங்டன்: ‘அடுத்த அதிபர் தேர்தலில் நான் போட்டியிட்டால், என்னுடன் கமலா ஹாரிசும் போட்டியிடுவார்,’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராக பதவியேற்று நேற்றுடன் ஓராண்டு முடிந்தது.  இந்நிலையில், இவருடன் தேர்தலில் போட்டியிட்டு துணை அதிபராக உள்ள தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசை பைடன் ஓரம்கட்டி வருவதாகவும், முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டங்களில் அவர் பறக்கணிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் உள்ளவர்களுக்கும், அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கும் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஓராண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் பைடன் அளித்த பேட்டியின்போது, ‘2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசும் தங்களுடன் இணைந்து போட்டியிடுவாரா?’ என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பைடன் அளித்த பதிலில், ‘அடுத்த அதிபர் தேர்தலில் மீண்டும் நான்  போட்டியிடுவேனா என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை நான் போட்டியிட்டால் என்னுடன் கமலா ஹாரிசும்  இணைந்து போட்டியிடுவார். அவர் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்,’ என்று தெரிவித்தார்.

* பைடனுக்கு இப்போதே 79 வயதாகிறது. அமெரிக்காவின் மிகவும் வயதான அதிபர் இவர்தான். 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் இவர் போட்டியிடவில்லை என்றால், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக  கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

* அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்து அவர் வெற்றி பெற்றால், அமெரிக்க அதிபர் பதவியில் அமரும் முதல் கருப்பினப் பெண், முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமைகளை அவர் பெறுவார்.

* ரஷ்யா பேரழிவை சந்திக்க நேரிடும்

வெள்ளை மாளிகையில் பைடன் நேற்று அளித்த பேட்டியின்போது, `உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், ரஷ்ய அதிபர் புடின் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால், அதற்காக ரஷ்ய அதிபர் புடின் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அந்நாடு பேரழிவை சந்திக்கும்,’ என எச்சரித்தார்.

* காபூல் தாக்குதல் வீடியோ வெளியீடு

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்தாண்டு ஆகஸ்டில் அமெரிக்க படைகள் வெளியேறியபோது, காபூல் விமானப்படை தளம் அருகே தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 13 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக, தீவிரவாதிகள் என நினைத்து அமெரிக்க படை நடத்திய டிரோன் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்காக சில மாதங்களுக்கு முன் அமெரிக்க ராணுவம் பகிரங்க மன்னிப்பு கேட்டது. இந்நிலையில், அந்த தாக்குதல் வீடியோவை அமெரிக்கா நேற்று வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், 2 எம்க்யூ-9 ரக டிரோன்களின் மூலம் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு, குடியிருப்பு வளாகத்தில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிழம்பாக காட்சி அளிக்கிறது. அதன் அருகே மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

Related Stories: