திருமலை: திருப்பதி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பக்தர்களுக்கு விரைவில் ஆந்திர சுற்றுலா துறை சார்பில் ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தில் செல்ல ₹10,500க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் மூலம் ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஏற்கனவே ஏழுமலையான் கோயில் சார்பில் செயல்பட்டு வரும் வாணி அறக்கட்டளைக்கு ₹10 ஆயிரம் நன்கொடையாக வழங்கும் பக்தர்களுக்கு 2019ம் ஆண்டு முதல் ஒரு விஐபி தரிசன டிக்கெட் ₹500 கட்டணத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தில் ஆன்லைனிலும் பக்தர்கள் நன்கொடை செலுத்தி விஐபி டிக்கெட் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.