மோகனூர் : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் தைப்பூச திருநாளையொட்டி, மோகனூரில் திமுக இளைஞரணி சார்பில் குதிரைப்பந்தயம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மோகனூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நவலடி தலைமை வகித்தார். இளைஞரணி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் இளம்பரிதி வரவேற்றார். பந்தயத்தில் பாண்டிச்சேரி, காரைக்கால், மதுரை, கோயமுத்தூர், திருச்சி, ஈரோடு, சேலம், கரூர் பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பந்தய குதிரைகள் பங்கேற்றன.
மோகனூர் அண்ணாசிலை முன்பு சிறிய குதிரை பந்தயத்தை, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், பெரிய குதிரை பந்தயத்தை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சிறிய குதிரைகள் 10 கி.மீ தூரமும், பெரிய குதிரைகள் 14 கி.மீ வரை சீறிப்பாய்ந்து ஓடின. இதனை சாலையின் இருபுறங்களிலும் திரண்டு, பொதுமக்கள் ஆரவாரத்துடன் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. புதுக்குதிரை பந்தயத்தில் கோவை சரத்குமார் குரூப்ஸ், கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை சேர்ந்த சாத்விகா குரூப்ஸ், கோவை வஞ்சியம்மன் துணை அசுரன் அணி வெற்றி பெற்றனர். பெரிய குதிரை போட்டியில் திருச்சி நம்பி உதயசூரியன், பேராவூரணி அப்பாஸ் அணி, ஆத்தூர் புரூட் அணி, குளித்தலை அய்யர் துணை அணி, மோகனூர் பிரசாத் பெற்றனர். சிறிய குதிரைப்போட்டியில் திருச்சி நம்பியூரை சேர்ந்த உதயசூரியன் அணி, பவானி கற்பனை விநாயகர் அணி, குளித்தலை வேகம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ராஜேஷ்குமார் எம்பி, வெற்றி கோப்பை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், உடையவர், சண்முகம், அர்ச்சுனன், சரஸ்வதி கருமணன், செல்லவேல், சுகுமார், வரதராஜன், கார்த்தி, நாகேந்திரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மோகன்குமார் நன்றி கூறினார்.