அலங்காநல்லூர் : அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டையொட்டி, காளைகளுக்கு உடல் தகுதி சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜன. 14, பாலமேட்டில் ஜன. 15, அலங்காநல்லூரில் ஜன. 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை, அலங்காநல்லூர் கால்நடை மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. அலங்காநல்லூர், பாலமேடு சுற்று வட்டார கிராமங்களில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, அவைகளின் வீடுகளுக்கே சென்று உடல் தகுதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இப்பணியில் கால்நடை மருத்துவக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், நாட்டு காளைகளுக்கு மட்டுமே தகுதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது.