கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சால் கண்புரை, விழிப்புள்ளி சிதைவு நோய்கள் ஏற்பட வாய்ப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: கோடை காலத்தில் சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்வீச்சால் கண்புரை நோய், விழிப்புள்ளி சிதைவு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சூரிய வெளிச்சம், தூசி மற்றும் மாசு ஆகியவற்றை கோடை காலத்தில் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், பல்வேறு கண் பாதிப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக கோடை காலத்தில் உலர்ந்த கண்கள், புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு மற்றும் கண் காயங்கள் ஆகியவை பொதுவாக அதிகளவில் ஏற்படுகிற கண் நோய்களாக இருக்கின்றன. இதுபோன்ற நேரங்களில் சூரியனின் கதிர்வீச்சு, ஒவ்வாமைகள் மற்றும் காயங்களிலிருந்து கண்களை பாதுகாப்பது மிக முக்கியமானது என டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர் சவுந்தரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டாக்டர் சவுந்தரி கூறியதாவது:

கோடை காலத்தில் கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க போதுமான அளவு கண்ணீரை உங்கள் கண்கள் சுரக்காத போது உலர்ந்த கண்கள் பிரச்னை ஏற்படுகிறது. இது நிகழாமல் தடுக்கவும் மற்றும் கண்களை ஈரப்பதத்துடன் வைக்கவும், செயற்கை கண்ணீரை அல்லது கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்வீச்சு, பல கண் நோய்களை விளைவிக்கக்கூடும். குறிப்பாக கண்புரை நோய், விழிப்புள்ளிச் சிதைவு, புறஊதா கதிர்களால் ஏற்படும் ஃபோட்டோகரட்டாடிஸ் ஆகியவை இவற்றுள் உள்ளடங்கும்.

இத்தகைய நோய்கள் வராமல் தடுப்பதற்கு கோடை காலத்தில் வீட்டிற்கு வெளியே நீங்கள் இருக்கும்போதெல்லாம் 100 சதவீதம் புறஊதா கதிர்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகிற குளிர் கண்ணாடிகளை (சன் கிளாஸ்) அணிய வேண்டும். கான்டாக்ட் லென்ஸ்களை அணிபவராக இருப்பின், அந்த லென்ஸ்களை கண்ணில் பொருத்துவதற்கும் அல்லது அகற்றுவதற்கும் முன்னதாக உங்களது கைகளை கழுவுவது உள்பட முறையான தூய்மை நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

கோடை வெப்பமும், தீவிர ஈரப்பதம் உள்பட கண் தொற்றுகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கக்கூடும். கண் தொற்றுகள் வராமல் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண்களை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். நீச்சல் குளத்தில் குளோரின் உள்ளதால் நீண்டநேரம் அதில் இருந்தால் கண்ணை பாதிக்கும். எனவே அதனை தவிர்க்க வேண்டும். டிஜிட்டல் திரையை பார்க்கும்போது அடிக்கடி இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். விழிப்புள்ளி சிதைவு அல்லது கண் அழுத்த நோய் போன்ற சில கண் நோய்கள் காலப்போக்கில் மெதுவாக வளர்ச்சி காணக்கூடியவை.

முதிர்ச்சியடையும் வரை அதன் அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம். எனவே, ஆரம்ப நிலையிலேயே கண் நோய்களை கண்டறிவதற்கு குறித்த காலஅளவுகளில் செய்யப்படும் கண் பரிசோதனைகள் உதவக்கூடும். பார்வைத்திறனில் திடீர் மாற்றங்கள் அல்லது கண் வலி உங்களுக்கு ஏற்படுமானால், உடனடியாகவே கண் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறவும். புகைப்பிடிப்பதனால் கண்புரை நோய் மற்றும் விழிப்புள்ளி சிதைவு உள்பட பல்வேறு கண் பிரச்னைகளுக்கான இடர்வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதால் புகைப்பிடிப்பதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

* கோடை வெப்பமும், தீவிர ஈரப்பதம் உள்பட கண் தொற்றுகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கக்கூடும். கண் தொற்றுகள் வராமல் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண்களை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

The post கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சால் கண்புரை, விழிப்புள்ளி சிதைவு நோய்கள் ஏற்பட வாய்ப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: