ஆகாய தாமரை பிடியில் சிவகாசி சிறுகுளம் கண்மாய்-அகற்ற கோரிக்கை

சிவகாசி : சிவகாசி சிறுகுளம் கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகாசி சிறுகுளம் கண்மாய் 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. சிவகாசி, சாட்சியாபுரம், செங்கமல நாச்சியார்புரம், ரயில்வே காலனி குடியிருப்பு பகுதி மழைநீர் இக்கண்மாயில் தேங்கும். கடந்த பல ஆண்டுகளாக பருவமழை சரிவர ெபய்யாததால் சிறுகுளம் கண்மாய் வறண்டு கிடந்தது. இதனால் கண்மாயில் இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இந்நிலையில் சிவகாசியில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் 15 ஆண்டுகளுக்கு பின் சிறுகுளம் கண்மாய் நீர் நிரம்பியது. தற்போது கண்மாயில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுகுளம் கண்மாயில் நீர் நிரம்பியதால் நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதற்கிடையே சிறுகுளம் கண்மாயில் ஆகாய தாமரை செடிகள் அடர்ந்து முளைத்துள்ளதால் கண்மாய் நீர் மாசடைந்து வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சிவகாசியின் நிலத்தடி நீராதாரமான சிறுகுளம் கண்மாயில் ஆகாய தாமரை செடிகளை அகற்ற உடனே நகராட்சி எடுக்க வேண்டும். மேலும் சிவகாசி நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு பொழுது போக்கு பூங்கா இல்லை. இதனால் மக்கள் விடுமுறை நாட்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதேபோல் நடைபயிற்சி மேடை வசதியும் இல்லை. எனவே சிவகாசி மாநகராட்சியின் மைய பகுதியில் உள்ள சிறுகுளம் கண்மாய் கரையில் நடை மேடை வசதியுடன் பொழுது போக்கு பூங்கா அமைத்து தர வேண்டும்’ என்றனர்.

Related Stories: