18-30 வயதிற்குள் உள்ள இளம் பெண்களை திமுக மகளிரணி உறுப்பினர்களாக இணைக்க வேண்டும்: கனிமொழி எம்பி வேண்டுகோள்

சென்னை: 18-திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்ட அறிக்கை: கொள்கை உறுதிகொண்ட இளைஞர்களாலும், எழுச்சிமிக்க பெண்களாலும் கட்டமைக்கப்பட்ட பேரியக்கம் திமுக. திமுகவின் அடித்தளமாக விளங்கும் இளையர்கள் பலரை நம் கொள்கைகள் சென்றடையவும், திமுகவில் அவர்களை உறுப்பினர்களாக இணைக்கவும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 18ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

தமிழகத்தின் மக்கள் தொகையில் சரிசமமான பங்குடையவர்கள் பெண்கள், அதிலும் நாளைய சமுதாயத்தின் சிந்தனையை வடிவமைக்கும் திறன் பெற்றவர்கள் இன்றிருக்கும் 18-30 வயதுடைய இளம் பெண்கள். நமது கழகத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்த இளம் பெண்களின் பங்கு இன்றியமையாதது. திமுகவின் மையக் கோட்பாடாக விளங்கும் சமூக நீதி சிந்தனையின் வெளிப்பாடே அரசியலில் பெண்கள் தனக்கென உரிமைகளை உருவாக்குவது. திமுக மகளிரணி அடுத்த தலைமுறைக்கான சுயசிந்தனை உடைய, உரிமைகளை உணர்ந்த இளம் பெண்களை உருவாக்க வேண்டும்.

அந்த விதத்தில் இன்றிருக்கும் 18-30 வயதிற்குள்ளான இளம் பெண்களை திமுகவில் ‘மகளிரணி உறுப்பினர்களாக’ இணைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அரசியலில் ஆர்வம் காட்ட துடிக்கும் இளம் பெண்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதைத் தாண்டி, நாம் 18-30 வயதிற்குள் உள்ள இளம் பெண்களை மகளிரணி உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கு அரசியலின் மேல் ஈடுபாடு ஏற்பட வழி செய்து நமது கட்சியின் எதிர்காலத்திற்கான அடித்தளம் வலுவாக உள்ளதை உறுதி செய்வோம்.

Related Stories: