ஜம்மு காஷ்மீர் தொகுதி வரையறையை கண்டித்து போராட்டம்: குப்கர் கூட்டணி அறிவிப்பு

ஜம்மு: தொகுதி வரையறை ஆணையத்தின் பரிந்துரைகள் பிரிவினையை உண்டாக்கும், ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று குற்றம்சாட்டிய குப்கர் மக்கள் கூட்டணி, இதற்கு எதிராக வரும் ஜனவரி 1ம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தற்போது காஷ்மீரில் 46, ஜம்முவில் 37 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி வரையறைக்காக நியமிக்கப்பட்ட ஆணையம் நேற்று முன்தினம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதில், ஜம்முவுக்கு கூடுதலாக 6 தொகுதிகள், காஷ்மீருக்கு ஒரு தொகுதியையும் பரிந்துரை செய்திருந்தது.

இதற்கு தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், குப்கர் மக்கள் கூட்டணியின் செய்தி தொடர்பாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான தாரிகமி கூறிய போது, ``தொகுதி வரையறை பிரச்னையில் அமைதியையே விரும்புகிறோம். ஆணையத்துடனோ அல்லது அரசுடனோ மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை. தொகுதி வரையறை குறித்த எங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வரும் ஜனவரி 1ம் தேதி ஸ்ரீநகரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த இருக்கிறோம். ஆணையத்தின் வரைவு அறிக்கை அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை. இது, ஜம்மு காஷ்மீர் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடியவை, ஏற்றுக் கொள்ள முடியாதவை என்பதில் குப்கர் கூட்டணி உறுதியாக உள்ளது,’’ என்றார்.

Related Stories: