பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பாக வேத சிவாகம பாடசாலையில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்.!

பழநி: பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி  திருக்கோயில் சார்பாக வேத சிவாகம பாடசாலையில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி  மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின்கீழ் நடத்தப்படும் வேத சிவாகம பாடசாலையில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள்    இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15.01.2022 தேதியன்று 12 முதல் 16 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பயிற்சி காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கான இறுதி நாள் 15.01.2022. மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலும் மற்றும் www.hrce.tn.gov.in , www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம் - 624 601 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.   இந்த வேத சிவாகம பாடசாலையில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Related Stories: