உத்தரப்பிரதேசத்தில் இருந்து ராயக்கோட்டை தக்காளி மண்டிக்கு, விற்பனைக்கு வந்த முதல் தரமான தக்காளி.

ராயக்கோட்டை : ராயக்கோட்டையில் விற்பனைக்காக குவிக்கப்பட்ட உத்தரப்பிரதேச தக்காளி பழங்களை வாங்க ஆள் இல்லாததால் தேக்கமடைந்துள்ளது. தமிழகத்தில் தொடர் மழை காரணமாக விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், அனைத்து வகையான காய்கறிகளின் விலை உயர்ந்தது. குறிப்பாக தக்காளி விலை பலமடங்கு அதிகரித்தது.

கிலோ ₹10 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி ₹100 முதல் ₹120 வரை உயர்ந்தது. இதனால், வெளியிடங்களிலிருந்து தக்காளியை வரவழைத்து விற்பனைக்காக குவித்தனர். ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் இருந்து தமிழகம் முழுவதும் தக்காளி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சுற்றுப்புற பகுதியில் சாகுபடி பாதிப்பால் வரத்து சரிந்ததால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

அம்மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், கடந்த வாரம் ஒரே நேரத்தில் ஆயிரம் கிரேடு தக்காளியை கொண்டு வந்து ராயக்கோட்டையில் இறக்கினார். ஒரு கிரோடில்(பெட்டி) சுமார் 25 கிலோ தக்காளி இருக்கும். கிரோடு ₹1300 வீதம் வாங்கி லாரியில் ஏற்றி கொண்டு வந்தார். அப்போதே வியாபாாிகள் கிரேடு தக்காளி ₹2300க்கு கேட்டுள்ளனர்.

ஆனால், மேலும் விலை உயரும் என்ற ஆசையில் யாருக்கும் கொடுக்காமல் மண்டியில் இருப்பு வைத்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைந்து வந்த நிலையில் உ.பி. தக்காளியை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், உ.பி. தக்காளியை வாங்கி வந்த விலையான ₹1300க்கே வியாபாரி கூவி கூவி விற்றார். கொண்டு வந்த அன்றே கிரேடு ₹2300க்கு விற்றிருந்தால் ₹1000 வீதம் ₹10 லட்சம் லாபம் கிடைத்திருக்கும் என உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: