கடனா, ராமநதி அணைகளில் இருந்து உபரிநீர் முழுமையாக வெளியேற்றம்

கடையம் : கடையம் அருகே  மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடனாநதி மற்றும் ராமநதி அணைகள் உள்ளது.  இந்த அணைகள் மூலம் சுமார் 14  ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள்  நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 25க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா நதி அணை  83  அடியையும், 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை 82 அடியையும்  எட்டியது.

இதனால் பாதுகாப்பு கருதி கடனா நதி அணைக்கு வரும் 900 கனஅடி உபரிநீரும், ராமநதி அணைக்கு வரும் 60 கனஅடி  உபரிநீரும் முக்கிய மதகுகள் வழியாக முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. இதனால்  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  மேலும் கரையோர  பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாகவும், ஆற்றுப் பகுதிக்கு செல்ல  வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: