தர்மசாலா: இமாச்சலப்பிரதேசத்தில் வறண்ட ஏரி ஒன்றில் தத்தளித்த ஆயிரக்கணக்கான மீன்களை தன்னார்வலர்கள் பிடித்து பல்வேறு நீர் நிலைகளுக்கு பாதுகாப்பாக மாற்றிய காணொளி இணையதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இமாச்சலப்பிரதேசத்தில் தர்மசாலா நகரத்தில் உள்ள தால் ஏரி மிகவும் பிரபலமான நீர் தேக்கமாகும். சமீப நாட்களாக இந்த ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் போதுமான நீர் இன்றி ஏராளமான மீன்கள் மடிந்து வந்தன. இதையடுத்து மீன்களை காப்பாற்ற லாரிகள் மூலம் ஏரியில் நீர் நிரப்ப தர்மசாலா நகர நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் போதுமான நீர் இன்றி மடியும் மீன்களை காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.