சைதை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மாநகர பஸ் தண்ணீரில் சிக்கியது; படகு மூலம் பயணிகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சென்னை: சென்னை ஐயப்பன்தாங்கலில் இருந்து மந்தைவெளி நோக்கி இன்று காலை வந்த மாநகர பஸ் ஒன்று சைதாப்பேட்டை அரங்கநாதன் சப்வேயில் உள்ள 3 அடி தண்ணீரில் சிக்கியது. அப்போது தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் பஸ்சில் இருந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். சென்னையில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக நகரம் முழுவதும் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சென்னை முழுவதும் உள்ள சுரங்கப்பாதைகள் அனைத்தும் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு மாநகர போலீஸ் தடை வித்துள்ளது. இதற்கிடையே சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் நேற்று தேங்கிய தண்ணீரை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் வெளியேற்றினர். இதனால் கனரக வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாக அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று காலை ஐயப்பன் தாங்கலில் இருந்து மந்தை வெளி நோக்கி ‘12 எம்’ மாநகர பஸ் வந்தது. சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில்  தேங்கியுள்ள தண்ணீரை டிரைவர் கணக்கிடாமல் பஸ்சை இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது பஸ் சுரங்கப்பாதையில் 3 அடி தண்ணீரில் சிக்கி நின்றது. இதில் பஸ்சில் பயணம் செய்த 2 பயணிகள், டிரைவர், நடத்துனர் ஆகிய 4 பேர் சிக்கி கொண்டனர். அதேநேரம் சுரங்கப்பாதையில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வந்ததால் உடனே சம்பவம் குறித்து தி.நகரில் உள்ள தீணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தி.நகர் தீயணைப்பு அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து ரப்பர் படகு மூலம் சுரங்கப்பாதையில் சிக்கிய பஸ்சில் இருந்து பயணிகள் உட்பட 2 போக்குவரத்து ஊழியர்களை மீட்டனர். மேலும், தண்ணீரில் சிச்கிய மாநகர பஸ்சையும் தீயணைப்பு வீரர்கள் மிட்டனர். இதனால் சிறிது நேரம் சைதாப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: