கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் உடைப்பு-சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1950ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு அந்த பாலத்தின் மூலம் தொடர்ந்து போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட ஊர் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையிலன் குறுக்கே கொள்ளிடம் பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தின் வழியே இரவும் பகலும் 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வகையான வாகனங்களும் சென்று வருகிறது.

இப்பாலத்தில் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே பாலத்தின் குறுக்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாலத்தில் உள்ள கம்பிகள் நீண்டு வெளியே தெரிகின்றன. பாலத்தின் உடைந்த பகுதி பள்ளமாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் அதிகம் விபத்து ஏற்படுகிறது. இந்தப் பாலத்தின் வழியாக இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள் கூட தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த 70 ஆண்டு காலமாக இந்த பாலம் பலம் குன்றாமல் அப்படியே வலுவுடன் இருந்து வருகிறது. இந்த பாலத்தை அடிக்கடி முறையாக பராமரிப்பதன் மூலம் மேலும் பல ஆண்டுகள் இந்த பாலம் நிலைத்து நிற்கும். எனவே தற்போது இந்த பாலத்தின் நடுப் பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் இந்த பாலத்தை முழுமையாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கொள்ளிடம் சமூக சேவகர் பிரபு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: