வீரபாண்டி, ஆத்துக்காடு பாலத்தில் பொங்கி வழியும் ரசாயன கழிவுநீர்-பொதுமக்கள் அவதி

இளம்பிள்ளை : வீரபாண்டி, ஆத்துக்காடு பாலத்தில் நிரம்பி வழியும் ரசாயன கழிவு நீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.வீரபாண்டி, பூலாவரி, ஆத்துக்காடு பகுதியில் தரைமட்ட நீர் ஓடை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியே இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம் மற்றும் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். காலையில் உழவு பொருட்களை டிராக்டரில் அதிகம் கொண்டு செல்வது வழக்கம். தற்போது தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதேபோல், சேலம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்காடு அடிவாரம் மற்றும் வீரபாண்டி, பூலாவரி பகுதியில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

அதனுடன் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுநீர் கலந்து வருவதால் தரைமட்ட பாலத்தில் நுரை பொங்கி வழிகிறது. மேலும், பாலத்திற்கு அடியில் குப்பை கழிவுகள் அகற்றப்படாததால் பாலத்தின் மீது கழிவு நீரின் நுரை ததும்பி செல்கிறது. இதனால் அவ்வழியே போக்குவரத்து பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இந்த ரசாயன கழிவு நீரால் பல்வேறு தொற்று நோய்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, நீரோடையில் படர்ந்துள்ள குப்பை கழிவுகளை அற்றி மழை நீர் சீராக செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: