வன்னியருக்கு உள் ஒதுக்கீடு முதல்வர் பதவி ஆசையால் எடப்பாடி போட்ட சட்டம்: அவசர கோலத்தால் ரத்து; நடிகர் கருணாஸ் குற்றச்சாட்டு

மதுரை: முதல்வர் பதவி ஆசையால், அவசரகோலத்தில் எடப்பாடி பழனிசாமி வன்னியருக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்ததாக நடிகர் கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு வழக்கில் சமூகநீதியை காக்கும் வகையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முதலமைச்சர் பதவி ஆசை காரணமாக ஒரு சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி, அவசரகோலத்தில் எடப்பாடி சட்டத்தை இயற்றினார். அதன் காரணமாகத்தான் தற்போது இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான பணியிடங்கள்  முழுமையாக நிரப்பப்படவே இல்லை. அந்த சமூகத்தினர் இல்லாத இடங்களில் அரசு பணியிடம் நிரப்பப்படாமல் உள்ள நிலைதான் தொடர்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் கணக்கெடுப்பின்றி இட ஒதுக்கீடு வழங்குவது சரியான சமூகநீதியாக இருக்காது. சமூகநீதி காக்க வேண்டும் என்றால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்விக்கு காரணம் இந்த உள் இடஒதுக்கீடு அறிவிப்பு தான். அதிமுக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை நோக்கி சென்றதுதான். மேலும் அதிமுக குறித்து கருத்து சொல்ல பிடிக்கவில்லை. நாங்கள் தேர்தல் நேரத்தில்  12 கோரிக்கைகளை வலியுறுத்தினோம், அதனை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால்தான் தேர்தலில் தோல்வி அடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: