எட்டயபுரம்: எட்டயபுரத்தில் விடிய விடிய பெய்த மழையிலும் நனைந்து கொண்டே வியாபாரிகள் ஆடுகள் விற்பனையில் ஈடுபட்டனர். எட்டயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டுசந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வரும். செம்மறி ஆடு, வெள்ளாடு என 5 கிலோ குட்டியிலிருந்து சுமார் 40 கிலோ எடை வரை அனைத்து வகையிலும் ஆடுகள் விற்பனைக்கு வருவதால் நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதற்கு இங்கு வருவார்கள். அதேபோல் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் வியாபாரம் அதிக அளவில் நடைபெறும்.