நாசரேத்தில் பரபரப்பு: காதல் திருமணம் செய்த புதுப்பெண் திடீர் மாயம்

நாசரேத்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பேய்க்குளம், கருங்கடல் பகுதியைச் சேர்ந்த மிக்கேல் அந்தோணி மகன் ஜஸ்டின் (28). இவர் திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணியாற்றிய வீரநாடு (23) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்தனர். இதையடுத்து கடந்த 19ம் தேதி ஜஸ்டின், வீரநாகுவை காதல் திருமணம் செய்தார்.

பெண் வீட்டார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், வீரநாகுவை அழைத்துக் கொண்டு ஜஸ்டின், நாசரேத்தில் உள்ள அக்காள் வீட்டுக்கு வந்தார். இனி திண்டுக்கல்லுக்கு வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால், மனைவியிடம் கூறி விட்டு வேலை தேடுவதற்காக கடந்த 23ம் தேதி நெல்லைக்கு சென்றார். பின்னர் இரவு வீட்டுக்கு வந்த போது வீரநாகுவை காணவில்லை. அக்காவிடம் விசாரித்ததில் நான் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றேன். வீட்டுக்கு வந்து பார்த்த போது அவளை காணவில்லை என்று கூறியுள்ளார்.

நாசரேத் ரயில் நிலையம், பஸ்நிலையம் ஆகிய இடங்களில் சென்று ஜஸ்டின் தேடி பார்த்தார். அங்கும் வீரநாகுவை காணவில்லை. திண்டுக்கல் செல்வதற்காக தூத்துக்குடி சென்றாரா? என்று பார்க்க காரை எடுத்துக் கொண்டு தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்திற்கு சென்று ஜஸ்டின் தேடிப் பார்த்தார். அவரைப் பற்றி துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜஸ்டின் நாசரேத் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி மாயமான புதுப்பெண் வீரநாகுவை தேடி வருகிறார்.

Related Stories: