2013 முதல் வேளாண்மைத்துறையில் ரூ.1000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக வழக்கு: முழுமையான ஆவணங்களுடன் தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

மதுரை: கடந்த 2013 முதல் வேளாண்மைத்துறையில் ரூ.1000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, முழுமையான ஆவணங்களுடன் பொது நல வழக்கு தாக்கல் செய்யும்படி தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த மணப்பாறை தாலுகா மானாவாரி மற்றும் இறவை பாசனத்தாரர்கள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் அப்துல்லா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழ்நாடு வேளாண்மைத்துறை இயக்குநராக கடந்த 2016 முதல் 2021 வரை தட்சிணாமூர்த்தி ஐஏஎஸ்  பணியாற்றினார். இவர், முன்னாள் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நெருக்கமானவர். விவசாயிகளிடம் இருந்து விதை கொள்முதல் செய்ததாக போலி பட்டியல் தயாரித்து மோசடி செய்துள்ளனர். தாமோதரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, துரைக்கண்ணு ஆகியோர் வேளாண்மைத் துறை அமைச்சர்களாக இருந்த காலத்தில் பயோ பூச்சிகொல்லி மற்றும் பயோ உரம் உள்ளிட்டவை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்வதற்கான உரிமம் விதிகளை மீறி வழங்கப்பட்டுள்ளது.

தரம் குறைந்த உரம் விற்பனையில் அதிகளவு லஞ்சம் கைமாறியுள்ளது. ஆத்மா திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனத்திற்கான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். ரூ.60 மதிப்புள்ள சாப்பாட்டை ரூ.100க்கு வாங்கியுள்ளனர். இந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் அளிக்கப்பட்ட புகார் இன்னும் நிலுவையில் உள்ளது. விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பலரும் இணைந்து முறைகேட்டிலும், ஊழலிலும் ஈடுபட்டுள்ளனர். நுண் உரம், ஜிங் சல்பேட் மற்றும் தானிய விதைகள் மானியத்தில் வழங்கும் திட்டத்திலும் கடந்த 2016-2021 வரை பெரும் முறைகேடு நடந்துள்ளது.

குறுவை காலத் திட்ட டெண்டரில் பினாமி நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. தனி நபர்களுக்கு டிராக்டர் வழங்கும் திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளன. ஐஎஸ்ஐ முத்திரையில்லாத, தரம் குறைந்த டேப்ெலட்டுகள் மற்றும் கணினிகள் வாங்கப்பட்டன. தரம் குறைந்த சீன தயாரிப்புகளை வாங்கி பெருமளவு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறி முந்தைய அதிமுக அரசிற்கு ஆதரவாக புயல் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013ல் இருந்து வேளாண்மைத் துறை முன்னாள் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்னர்.

 குறிப்பாக சொட்டுநீர் பாசன கருவிகள் வாங்கியது, இயந்திர கொள்முதல், விதை கொள்முதல், பிகோ கேமரா கொள்முதல்,  டேப்லெட் மற்றும் கணினி பொருட்கள் வாங்கியது, பல்வேறு திட்டங்களில் அதிகளவு முறைகேடு நடந்துள்ளது. எனவே, இந்த மோசடி மற்றும் முறைகேடு தொடர்பாக விசாரித்து தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைச்சுவாமி ஆகியோர், ‘‘பொத்தாம் பொதுவாக குற்றசாட்டுகள் உள்ளன. போதுமான ஆவணங்கள் இல்லாமல் புகார் கூறப்பட்டுள்ளது. மனுதாரருக்கு தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மனு செய்யும் போது வழக்கு தொடர்பான முழுமையான ஆவணங்களுடன் பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டும்’’ எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: