திருச்சி சாலையில் கான்கிரீட் கலவை கொட்டி சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு குவிகிறது

கோவை : கோவை திருச்சி ரோடு ராமநாதபுரம் பகுதியில் இருந்த பள்ளத்தை கான்கிரீட் கலவை கொட்டி சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கோவை திருச்சி ரோட்டில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின் காரணமாக சாலையின் பல்வேறு பகுதிகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் சந்திப்பில் மேம்பாலம் பணியின் காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டு இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. மேலும், சமீபத்தில் பெய்த மழையினால் அந்த பள்ளம் மேலும் பெரியதானது. இதனை சரிசெய்ய சம்மந்தப்பட்ட துறையினர் முன்வரவில்லை.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், அதனை சீரமைக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து, ராமநாதபுரம் போக்குவரத்து எஸ்ஐ தேவராஜ் உதவியுடன் இரண்டு போலீசார் கான்கிரீட் கலவையை சாலையில் இருந்த பள்ளத்தில் கொட்டி சீரமைத்தனர். இதனால், அப்பகுதியில் நீடித்து வந்த போக்குவரத்து நெரிசல் குறைந்தது. போலீசார் சாலையை சீரமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், அவர்களுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அதிகாரிகள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: