தேசிய மாநாட்டு கட்சியில் இருந்து விலகிய ஒன்றிய அமைச்சரின் தம்பி பாஜவில் சேர்ந்தார்

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் இளைய சகோதரர் தேவேந்தர் ராணா தேசிய மாநாட்டு கட்சியில் இருந்து விலகிய நிலையில் நேற்று பாஜவில் இணைந்தார். ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் சகோதரரும், முன்னாள் எம்எல்ஏ தேவேந்தர் ராணா. இவர் ஜம்முவின் முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாவிற்கு அரசியல் ஆலோசகராக பணியாற்றியவர். இந்நிலையில் தேவேந்தர் ராணா மற்றும் தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த மற்றொரு தலைவரான சுர்ஜித் சிங் சிலாதியா ஆகியோர் நேற்று முன்தினம் தேசிய மாநாட்டு கட்சியில் இருந்து விலகினார்கள். இதனை தொடர்ந்து நேற்று அவர்கள் பாஜவில் இணைந்தனர்.

டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்தில் ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஹர்தீப் சிங் பூரி, ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில் பாஜவில் தங்களை இணைத்துக்கொண்டனர். உத்தரகாண்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜவை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சரான யாஸ்பால் ஆர்யா, அவரது மகன் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று பாஜவில் இருந்து விலகி நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். அமைச்சர் யாஸ்பால் ஆர்யா, எம்எல்ஏவான அவரது மகன் மற்றும் ஆதரவாளர்கள் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஹரீஷ் ராவத், கேசி வேணுகோபால் மற்றும் ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Related Stories: