ஸ்ரீநகர் : ஜம்மு- காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். காஷ்மீரில் கடந்த 5 நாளில் பொது இடத்தில் அப்பாவி மக்கள் 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கடந்த வியாழக்கிழமை ஸ்ரீநகரின் ஈத்கா பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தீபக் சந்த் என்பவரும், தலைமை ஆசிரியர் சுபிந்தர் கவுர் என்பவரும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.குறிப்பாக, முஸ்லிம் ஆசிரியர்களை விட்டு விட்டு, இவர்கள் 2 பேரை மட்டும் பள்ளியில் இருந்து வெளியே இழுத்து வந்து சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து செயல்படும் ‘எதிர்ப்பு முன்னணி’ என்ற தீவிரவாத இயக்கம் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மை இந்து மற்றும் சீக்கிய சமூகங்களை பயமுறுத்தும் நோக்கத்துடன் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.