நாடு முழுவதும் இதுவரை 95 கோடி பேருக்கு தடுப்பூசி: விரைவில் 100 கோடியை எட்டும் என ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா நம்பிக்கை..!

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 95 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் திட்டம் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக, சுகாதார பணியாளர்களுக்கும், பிப்ரவரி 2ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்போடும் திட்டம் தொடங்கப்பட்டது.

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் கொரோனா 3ஆம் அலை குறித்த அச்சம் எல்லோருக்குமே இருக்கிறது. அடுத்த அலையை எதிர்கொள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என ஒன்றிய அரசு உறுதியாக கூறி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் முயற்சி காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா வேகமாக முன்னேரி வருகிறது.

சர்வதேச அளவில் இல்லாத அளவாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளின்போது இந்தியாவில்  2 கோடியே 50 லட்சத்துக்கு அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.  கடந்த ஜூன் மாதத்தில் சீனாவில் ஒரே நாளில் 2.47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது. இதனை இந்தியா முந்தியது. இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 95 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 100 கோடி என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: