இந்தியாவின் கோவாக்சினுக்கு விரைவில் அங்கீகாரம்?: அடுத்த வாரம் இறுதி முடிவு செய்கிறது உலக சுகாதார அமைப்பு..!!

ஜெனிவா: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்துவதுபற்றி உலக சுகாதார அமைப்பு  அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கிறது. கொரோனா தொற்றினை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்காவின் ஃபைசர், பிரிட்டனின் ஆஸ்ட்ரா ஜெனிகாவின் கோவிஷீல்ட் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரக்கால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்க WHOவிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இது தொடர்பான கூடுதல் தரவுகளை சமர்பிக்கும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டதால் கடந்த செப்டம்பர் 27ம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் அது தொடர்பான விவரங்களை அளித்தது. இந்த தரவுகளை உலக சுகாதார அமைப்பும், சர்வதேச மருத்துவ குழுவினரும் ஆராய்ந்து அடுத்த வாரம் இறுதி முடிவை எடுக்க உள்ளதாக WHO தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சர்வதேச அளவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்த கோவாக்சினுக்கு அடைத்த வாரம் WHO-வின் அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று தெரிகிறது. உலக சுகாதார அமைப்பின் அவசர கால அனுமதி கோவாக்சின் தடுப்பூசிக்கு மிகவும் முக்கியமாகும். ஏனெனில் இந்த அங்கீகாரம் இல்லாமல், கோவாக்சின் தடுப்பூசி பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: