புழல்: செங்குன்றத்தில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். செங்குன்றத்தில் பிடபிள்யுடி மற்றும் எம்.கே.காந்தி தெரு உள்ளது. இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று திடீரென செங்குன்றம் பொதுப்பணித்துறை சார்பில் அங்கு வசித்து வந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் 21 நாட்களுக்குள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே அருகில் இருந்த செங்குன்றம் பொதுப்பணித்துறை அலுவலகம் சென்று அதன் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.