புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு பரிசாக கொடுக்கப்பட்ட பொருட்கள், அவருடைய 71வது பிறந்தநாளை முன்னிட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது. இதில், சமீபத்தில் பாராலிம்பிக், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் பயன்படுத்தி ஈட்டி, குத்துச்சண்டை கையுறை, வாள் உள்ளிட்டவையும் ஏலம் விடப்பட்டு வருகின்றன.
அக்டோபர் 2ம் தேதி வரையில் இந்த இ-ஏலம் நடைபெறுகிறது. இதில் கிடைக்கும் தொகை, கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், பிரதமர் மேடி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘கடந்த பல ஆண்டுகளாக எனக்கு அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள் ஏலம் விடப்படுகின்றன. நமது ஒலிம்பிக் கதாநாயகர்கள் அளித்த பரிசுகளும் இதில் உள்ளன. எனவே, ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள்,’ என்று மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.