கோர்ட்டில் ஆஜராக தவறினால் நடிகை கங்கனாவுக்கு கைது வாரண்ட்: மாஜிஸ்திரேட் எச்சரிக்கை

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தரை இழிவு படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், ஜாவத் அக்தர் தாக்கல் செய்த மனு மீது நேற்று அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கங்கனா ரணாவத் ஆஜராகவில்லை. கங்கனாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது ஜாவேத் அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது விசாரணையை இழுத்தடிப்பதற்கான திட்டமிட்ட நாடகம். விசாரணைக்கு ஆஜராகுமாறு பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை பலமுறை கங்கனாவுக்கு கோர்ட் சம்மன் அனுப்பிள்ளது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என தெரிவித்தார். இதைக் கேட்ட பின்னர், நேற்றைய விசாரணைக்கு மட்டும் விலக்கு அளித்த நீதிபதி, விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினமும் கங்கனா ஆஜராக தவறினால், அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் மாஜிஸ்திரேட் எச்சரித்தார்.

Related Stories: