திருக்கண்டலம் கிராமத்தில்ரூ.18 கோடி மதிப்பில் தடுப்பணை சீரமைப்பு: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் ஆய்வு

ஊத்துக்கோட்டை: திருக்கண்டலம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புயலால் சேதமடைந்த தடுப்பணை ரூ.18 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.

பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என திருக்கண்டலம், குருவாயல், சேத்துப்பாக்கம், ஆரிக்கப்பேடு உள்ளிட்ட 10 கிராம விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2014ம் ஆண்டு ரூ.33 கோடி செலவில் திருக்கண்டலம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது.

இந்த தடுப்பணை 2015ம் ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலின் வெள்ளப்பெருக்கால் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட மழைநீரால் அடித்து செல்லப்பட்டு தடுப்பணை இரண்டாக உடைந்தது. தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி 5 வருடங்களுக்கு பிறகு ரூ.18 கோடி செலவில் தடுப்பணையை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி கடந்த வருடம் மார்ச் மாதம் தடுப்பணை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. மேலும், இந்த பணிகள் கடந்த மாதத்துடன் முடிந்தது. இந்நிலையில், தடுப்பணையை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அவருடன் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியவேலு, ஒன்றிய கவுன்சிலர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் மதன், பிடிஒக்கள் ராஜேஸ்வரி, ஸ்டாலின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: