உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுகவில் விருப்ப மனு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கட்சியினர் உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.

மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினருக்கு ரூ.5,000, ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினருக்கு ரூ.3000 ஆகும். தற்போது நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கனவே விருப்ப மனு அளித்துள்ளவர்கள் அதற்கான அசல் ரசீது மற்றும் நகலினை, சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.  சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் விருப்ப மனு பெறுவது சம்பந்தமான விபரங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

Related Stories: