புதுடெல்லி:ஆப்கான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 25 ஐஎஸ் ஆதரவாளர்களால் இந்தியாவுக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு, கேரளாவைச் சேர்ந்த 25 பேர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆப்கான் சென்றனர். கிட்டத்தட்ட மேற்கண்ட அனைவரும் கடந்த 2016 முதல் 2018ம் ஆண்டுக்கு இடையில் பல்வேறு காலகட்டங்களில் ஆப்கானிஸ்தானுக்கு கள்ளத்தனமாக தப்பிச் சென்றனர். தற்போது, ஆப்கானிஸ்தான் நாடானது தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், சிறைகளில் அடைக்கப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில், இந்தியாவை சேர்ந்த ஐஎஸ் ஆதரவாளர்கள் 25 பேரும் அடங்குவர் என்று இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.