புதுடெல்லி: சர்வதேச அளவில் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் செயல் திட்டத்தை கொண்டு வர, பிரதமர் மோடி தலைமையில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 13வது பிரிக்ஸ் மாநாடு காணொலி மூலமாக நேற்று நடந்தது. இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரக்க அதிபர் சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் ஜார் பொல்சானரோ ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் முழுமையான ஒத்துழைப்பை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக பிரிக்ஸ் பல சாதனைகளை படைத்துள்ளது. பணப்புழக்கம், வணிகச் செயல்பாடுகள், தொழில் பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் உலகின் சக்தி வாய்ந்த குரலாக இம்மாநாடு அமைந்துள்ளது.