திருமலை: தெலங்கானாவில் போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் பல தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் கடந்த 2017ம் ஆண்டு முதல் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். இயக்குனர் பூரி ஜெகநாத், நடிகைகள் சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், நடிகர்கள் ராணா, நவ்தீப், ரவிதேஜா என 12 திரை பிரபலங்கள் சாட்சியாக மட்டுமே சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. போதை மருந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கெல்வின் என்பவரிடம் கடந்த வாரம் கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல்போனில் இருந்த தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகைகளின் ‘பர்ஷனல்’ எண்கள் இருந்தது தெரிந்தது. அதனடிப்படையில் இவர்களுக்கெல்லாம் போதை மருந்து சப்ளை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.