தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (67), நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவரது உடல் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தென்கரை தெற்கு அக்ரஹாரம் தெருவில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், விஜயலட்சுமியின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். ஓபிஎஸ்சுக்கு ஆறுதல் கூறினார். நேற்று காலை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், முத்துசாமி மற்றும் தேனி கலெக்டர் முரளீதரன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.