கேரளாவில் திருமணத்திற்கு மறுத்ததால் வெறிச்செயல்: 17 இடத்தில் கத்தியால் குத்தி இளம்பெண் கொடூர கொலை

*  காப்பாற்ற முயன்ற தாய்க்கும் கத்திகுத்து

* வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அருகே கரப்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவதாஸ். இவரது மனைவி வல்சலா. இருவரும் மாற்றுத்திறனாளிகள். இவர்களது ஒரே மகள் சூர்ய காயத்திரி(20). கடந்த 2 வருடங்களுக்கு முன் இவருக்கும், கொல்லத்தை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடந்தது. இந்தநிலையில் கணவர் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சூர்ய காயத்திரி கடந்த 6 மாதமாக கணவரை பிரித்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார். திருவனந்தபுரம் அருகே பேயாடு பகுதியை சேர்ந்தவர் அருண்(28). இவருக்கும் சூர்ய காயத்திரிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சூர்ய காயத்திரியின் நடவடிக்கைகள் அருணுக்கு பிடித்து போனது. இதனால் அவரை திருமணம் செய்ய அருண் விருப்பியுள்ளார். இதற்கு சூர்ய காயத்திரி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டிற்கு நேற்று மாலை அருண் சென்றுள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்யுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். அப்ேபாது இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சூர்ய காயத்திரியின் வயிறு, நெஞ்சு உள்பட பல இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் மீண்டும் கத்தியால் சரமாரி குத்தினார்.

17 இடங்களில் கத்தி குத்து விழுந்தது. மகளின் அலறல் சத்தம் கேட்டு தாய் வல்சலா ஓடி வந்தார். அவரையும் அருண் கத்தியால் குத்தினார். பின்னர் சிவதாசையும் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உயிருக்கு போராடிய சூர்ய காயத்திரி, படுகாயடைந்த வல்சா ஆகியோரை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சூர்ய காயத்திரி இறந்தார். தாய் வல்சலாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே தப்பியோடிய அருணை அப்பகுதி பொதுமக்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை நெடுமங்காடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர். தொடர் விசாரணையில், அருண் மீது வஞ்சியூர், ஆரியநாடு மற்றும் பேரூர்கடை ஆகிய காவல் நிலையங்களில் ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: