பாரிஸ்: சின்சினாட்டி ஓபன் டென்னிசில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம், ஏடிபி தரவரிசையில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ், 5ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 4ம் இடத்தில் இருந்த ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால் தற்போது 5ம் இடத்திற்கு இறங்கியுள்ளார். டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் டென்னிசில் தங்கப்பதக்கம் வென்ற அலெக்சாண்டர் ஸ்வரெவ், தொடர்ந்து சின்சினாட்டி ஓபனிலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றிகளின் மூலம் அவர் ஏடிபி தரவரிசையில் 5ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த மே 2019ல் ஸ்வரெவ், ஏற்கனவே 4ம் இடத்தில் இருந்தார். ஸ்பெயினின் முன்னணி நட்சத்திரம் ரஃபேல் நடால் காயம் காரணமாக சின்சினாட்டி ஓபனில் ஆடவில்லை. அடுத்து நடைபெற உள்ள யு.எஸ். ஓபன் போட்டிகளிலும் அவர் ஆடவில்லை. யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரோஜர் பெடரரும், காயம் காரணமாக இந்த ஆண்டு யு.எஸ். ஓபனில் இருந்து விலகிக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.